நாகை: டவ்தே புயலில் சிக்கி மாயமான 32 பேரில் 23 பேர் கரை திரும்பினர்; 9 பேரை காணவில்லை
டவ்தே புயலில் சிக்கி 32 மீனவர்கள் மாயமான நிலையில் அவர்களில், 23 மீனவர்கள் இரண்டு படகில் இன்று நாகை வந்து சேர்ந்தனர்.
நாகப்பட்டினத்தை அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 9 மீனவர்கள் , நாகை ஆரிய நாட்டு தெரு மீனவர்கள் 23 பேர் என மொத்தம் 32 பேர் மூன்று விசைப்படகில் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில் கேரளா அருகே டவ்தே புயலில் சிக்கி நடுக்கடலில் படகு மூழ்கியதில் 9 மீனவர்கள் மாயமானார்கள். காணாமல்போன மீனவர்கள் மீட்கப்படாத காரணத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டு படகில் சென்ற 23 மீனவர்கள் இன்று நாகை துறைமுகம் வந்து சேர்ந்தனர்.
அவர்களை மீனவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர். மாயமான மீனவர்களை தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வரும் நிலையில், கடலில் தத்தளித்த தங்களுக்கு கரை திரும்ப தமிழக மீன்வளத் துறை அதிகாரிகள் எந்த உதவியும் செய்யாமல் அவதூறாக பேசியதாக மீனவர்கள் குற்றம்சாட்டினர். 9 மீனவர்களை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.