கிருஷ்ணகிரி: கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி போராட்டம் - அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து, கர்நாடகா அரசுப் பேருந்தை சிறை பிடித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
NTK
NTKpt desk

டெல்லியில் நேற்று காவிரி மேலாண்மை ஆணையக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அதிகாரிகளுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பாக கடுமையான வாதம் நடைபெற்றது.

இதையடுத்து 'காவிரியில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,000 கனஅடி நீர் கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் ஹல்தர் உத்தரவிட்டார். இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா மூத்த அமைச்சர்களுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

NTK
NTKpt desk

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே கர்நாடக மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கர்நாடகா மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநில அரசை கண்டித்தும், தமிழகத்திற்கான உரிமைகளை பெற்று தராமல் காலம் தாழ்த்தி வருவதாக மத்திய பாஜக அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்தும், தமிழ்நாட்டில் காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டவில்லை எனக்கூறி ஆளும் திமுக அரசை கண்டித்தும், இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வந்த கர்நாடக மாநில அரசுப் பேருந்தை திடீரென சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீசார், உடனடியாக அவர்களை அப்புறப்படுத்தி சிறைபிடிக்கப்பட்ட பேருந்தை மீட்டு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com