
முதியவருக்கு லிப்ட் கொடுப்பதுபோல் நடித்து நூதன முறையில் ரூ.38 ஆயிரம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை தி.நகர் காந்தி தெருவில் வசித்து வருபவர் சிவராமன் (76). இவர் இந்திய கப்பல் கழகத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றனர். நேற்று சிவராமன் தி.நகர் பனகல் பார்க் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்று ரூ. 40 ஆயிரம் பணம் எடுத்தார். பணத்தை பையில் வைத்து விட்டு வீட்டிற்கு நடந்து செல்லும்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர், சிவராமனிடம் பேசி லிப்ட் கொடுப்பதாக கூறியுள்ளார்.
பையை பைக்கின் முன்பு வைத்து கொள்வதாக கூறி அந்த நபர் பணப்பையை வாங்கி வைத்தார். பிறகு அந்த நபர் வீட்டில் இறக்கி விட்டு சென்ற பின்பு, சிவராமன் பையை பிரித்து பார்த்த போது உள்ளே இருந்த ரூ. 38 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்தில் அந்த முதியவர் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.