படகில் இருந்து கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்: கடத்தல் தங்கமா? ஸ்கூஃபா டைவிங் மூலம் தேடுதல்

படகில் இருந்து கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்: கடத்தல் தங்கமா? ஸ்கூஃபா டைவிங் மூலம் தேடுதல்
படகில் இருந்து கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்: கடத்தல் தங்கமா? ஸ்கூஃபா டைவிங் மூலம் தேடுதல்

இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்டு கடலில் வீசப்பட்டதாக சொல்லப்படும் தங்க கட்டிகளை அதிநவீன கருவிகளைக் கொண்டு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மன்னர் வளைகுடா கடல் வழியாக மண்டபத்திற்கு தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று இரவு மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டனர்.

அப்போது மண்டபத்தைச் சேர்ந்த மீன்பிடி பிளாஸ்டி பைப்பர் படகு ஒன்று மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் நோக்கி வந்தது. இதையடுத்து அந்த படகை நிறுத்தி சோதனை செய்ய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முயன்றனர். அப்போது படகில் இருந்தவர்கள் மர்ம பொருள் ஒன்றை கடலில் வீசியுள்ளனர்.

இதையடுத்து படகை மடக்கிப் பிடித்த இந்திய கடலோர காவல் படையினர், படகில் இருந்த மூன்று பேரை பிடித்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மண்டபத்தைச் சேர்ந்த மூவர் படகில் இருந்ததாகவும் அவர்கள் வேதாளையைச் சேர்ந்த நபருக்கு இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாகவும், கடலோர காவல் படையினரை கண்டதும் அதை கடலில் வீசியதாக தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து படகில் இருந்து கடலில் வீசப்பட்ட அந்த மர்ம பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரி மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து தேடி வந்தனர். இந்நிலையில் தற்போது ஸ்கூஃபா டைவிங் மற்றும் கடல் விளையாட்டு வீரர்களைக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று தேடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடலில் வீசப்பட்ட மர்ம பொருளை மீனவர்கள் அல்லது கடத்தல்காரர்கள் எடுத்துச் செல்லாமல் இருப்பதற்காக மண்டபம் தெற்கு கடல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கூடுதலாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மீறி சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்குள் பைபர் படகில் பலலட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்ட சம்பவம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இந்நிலையில் கடலில் வீசப்பட்ட மர்ம பொருள் தங்கம் என்பது உறுதியாகியுள்ளது. கடலில் தேடுதல் வேட்டை நடைபெற்ற நிலையில: கடலுக்குள் இருந்து தங்க கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், ரூ.7.50 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து தங்கத்தை மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com