மைசூர் | கோயிலுக்கு சென்று வந்ததும் ஒரே குடும்பத்தில் 4 பேர் மர்ம மரணம்.. போலீசார் விசாரணை!
மைசூர் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் மைசூரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைசூர் மாவட்டம் விஸ்வேஸ்வரய்யா நகரின் வித்யாரண்யபுராவில் உள்ள சங்கல்ப் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் பிரியம்வதா (62) என்பவர் தனியாக வசித்து வந்த நிலையில், அவருக்கு அடுத்த வீட்டில் அவரது மகன் சேத்தன் (45), அவரது மனைவி (43) மற்றும் அவர்களின் மகன் குஷால் (15) ஆகியோர் வசித்து வந்தனர்.
சேத்தன் ஹாசனில் உள்ள கோரூரைச் சேர்ந்தவர், அவரது மனைவி மைசூருவைச் சேர்ந்தவர். சேத்தன் ஒரு இயந்திர பொறியாளராக இருந்து வந்துள்ளார். இவர் 2019ல் மைசூருவுக்கு மாற்றப்படுவதற்கு முன் துபாயில் பணிபுரிந்தார். தற்போது ஆன்லைன் செயல்முறையைப் பயன்படுத்தி சவுதிக்கு தொழிலாளர்களை அனுப்பும் ஒப்பந்தகாரராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், குடும்பத்தினர் அனைவரும் நேற்று கோரூரில் உள்ள கோவிலுக்குச் சென்று வந்துள்ளனர். பிறகு வீட்டில் ஏதோ நடந்ததை அடுத்து அனைவரும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சேத்தன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
தடயவியல் அறிவியல் ஆய்வகம் மற்றும் குற்றவியல் அதிகாரியின் குழு ஆய்வு செய்து வருகின்றனர். இவர்களின் ஆய்வு பிறகு இது தற்கொலையா இல்லை கொலையா என்பது குறித்து தெரியவரும். நால்வரின் மரணத்தின் தன்மை இன்னும் விசாரணையில் உள்ளது. என காவல்துறை சார்பில் தெரிவித்துள்ளார்.