ஆறுமாத காலம் தன்னுடன் பேசுவதைத் தவிர்த்த மகளின் நிபந்தனையை ஏற்று, குளத்தை தந்தை தூர்வாரிய நெகிழ்ச்சி சம்பவம் திருவாரூரில் அரங்கேறியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மருதானம் பகுதியைச் சேர்ந்த பூக்கட்டும் தொழிலாளி சிவக்குமார். இவருக்கு விவேகானந்தன் என்ற மகனும், நதியா என்ற மகளும் உள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார், அடிக்கடி தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த மகள் நதியா கடந்த 6 மாதங்களாக தனது தந்தையுடன் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
தன்னுடன் பேசுமாறு சிவக்குமார் தொடர்ந்து நதியாவிடம் கெஞ்சி வந்துள்ளார். வைராக்கிய குணத்துடன் இருந்த நதியா தந்தையின் வேண்டுகோளுக்கு செவிமடுக்க மறுத்தார். இவ்வாறு ஆறு மாதங்கள் கழிந்ததால், மனப்புழுக்கத்தில் இருந்தார் சிவக்குமார். ஒரு கட்டத்தில், "உன்னிடம் பேசவேண்டும் என்றால் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று மகளிடமே கேட்டுள்ளார் தந்தை சிவக்குமார்.
அதற்கு, 'தனது பள்ளிக்கு பின்னால் உள்ள குளம் மாசடைந்து காணப்படுவதால், தனக்கும் தன்னுடன் பயில்வோருக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது' எனக் கூறியுள்ளார். 'அந்தக் குளத்தை தூர்வாரிக் கொடுத்தால் உங்களுடன் பேசுவேன்' என்று தந்தையிடம் கூறிவிட்டார் மகள். நவீன உலக பெண் குழந்தைகள் எதை எதையோ கேட்கும் இக்காலக்கட்டத்தில், நதியாவின் உயரிய சிந்தனையை எண்ணி சிலிர்த்துப்போனார் சிவக்குமார்.
மகளின் அன்புக் கட்டளைக்கு பணிந்த சிவக்குமார், சர்வதேச மகள்கள் தினத்தில் உணவைக்கூட தவிர்த்து, நதியாவின் மேற்பார்வையிலேயே குளத்தை தூய்மைப்படுத்தினார். இனி மது அருந்துவதை கைவிடுவதுடன், வீட்டில் மனைவியுடன் சண்டையிடப் போவதில்லை எனவும் சிவக்குமார் உறுதி அளித்துள்ளார்