என்னுடைய நியமனம் தகுதியின் அடிப்படையிலேயே நடந்தது.. துரைசாமி பேட்டி
துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கில் பணம் பறிமாறப்பட்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குற்றம்சாட்டியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் ஆளுநர், ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவது தமிழக மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், ஊழல் புகாருக்கு உள்ளானவர்களை ஆளுநர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் இல்லை என சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2017-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முறைப்படி, தேடுதல் குழுவில் உள்ள 3 பேரில் இருந்து தகுதியின் அடிப்படையில் தன்னை தேர்வு செய்தததாக கூறியுள்ளார். துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் என ஆளுநர் குற்றம்சாட்டும் நிலையில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.