தேசிய கீதம் பாடி போராட்டத்தை முடித்த இஸ்லாமியர்கள்...!
சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய போராட்டம் நிறைவடைந்தது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னையிலும் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் வகையில், பல்வேறு பகுதிகளில் இருந்து கலைவாணர் அரங்கம் அருகே ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் குவிந்தனர்.
அங்கிருந்து பேரணியாகச் சென்று சட்டப்பேரவையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டிருந்தன. ஆனால், அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததால் சேப்பாக்கம் வரை இஸ்லாமியர்கள் பேரணியாகச் சென்றனர். 35 கேமராக்கள், 100 சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறையினர் பேரணியை கண்காணித்தனர். இதனையடுத்து தேசிய கீதம் பாடி போராட்டத்தை இஸ்லாமியர் முடித்து வைத்தனர். உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக சட்டமன்றத்தை முற்றுகையிடப் போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்கும் நடைமுறையை பின்பற்றாததால், மார்ச் 11-ம் தேதி வரை இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ள சட்டமன்ற முற்றுகை போராட்டத்திற்கு தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.