கொலை மிரட்டல் வருவதாக மதுசூதனன் போலீசில் புகார்
அதிமுக அம்மா அணியிலிருந்து டிடிவி தினகரன் ஒதுக்கப்பட்டதால், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக மதுசூதனன் தமிழக காவல்துறை டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடமும் புகார் அளித்துள்ளார்.
மதுசூதனன் சார்பில் வழக்கறிஞர்கள் இந்த மனுவைக் கொடுத்துள்ளனர். மேலும், டிடிவி.தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் பெரம்பூர் எம்.எல்.ஏவும் தன்னை மிரட்டுவதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது தினகரன் தனக்கும் தன்னுடைய மாற்று வேட்பாளர் ராஜேஷிற்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக மதுசூதனன் புகார் அளித்திருந்தார். அப்போது அவரது இல்லத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டது.