முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் - செல்லூர் ராஜூ

முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் - செல்லூர் ராஜூ
முல்லை பெரியாறு அணை விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் - செல்லூர் ராஜூ

முல்லை பெரியாறு அணை விவகாரம் அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்கிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அதிமுக அறிவித்துள்ள போராட்டம் தொடர்பாக இன்று மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது...

முல்லை பெரியாறு அணையில் 142அடி நீரை தேக்க அனுமதி பெற்றுத் தந்த ஜெயலலிதாவின் ஆன்மா திமுகவை மன்னிக்காது. தமிழர்களின் உரிமைகளை காக்கத் தவறிய திமுக அரசு கையாலாகாத அரசாக உள்ளது. கேரள அரசை கேள்வி கேட்க ரோஷமில்லாத அமைச்சர் துரைமுருகன் தற்போது காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

காடு வாவா, வீடு போபோ எனும் வயதிலும் காழ்ப்புணர்வுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை தன்னிலை மறந்து அமைச்சர் துரைமுருகன் வசை பாடியுள்ளார். நாலாம் தர பேச்சாளர் போல பேசுகிறார் துரைமுருகன். அதிமுக அரசு ஏன் அணையை ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்க அவருக்கு அருகதை இல்லை. அப்போது அணையை ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லாமல் இருந்தது. இப்போது தான் அதற்கான தேவை இருக்கிறது.

2018-இல் இடுக்கி அணை திறக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் அத்துமீறி நடந்து கொண்ட போது தடுத்தது அதிமுக அரசு. சுதந்திர இந்தியாவில் ஒரு மாநில விவகாரத்தில் இன்னொரு மாநிலம் தலையிட்டதாக வரலாறு உள்ளதா? விதிப்படி தான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை? முதலமைச்சர் ஏன் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை?

அதிமுக ஆட்சி காலத்தில் கேரளாவில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்ட நிலையிலும் கூட தண்ணீர் திறக்கப்படவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் உரிமைகள் நிலை நாட்டப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை பார்த்து, இதே போல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com