“பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம்” - எம்.பி கனிமொழி

“பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும்” என எம்.பி கனிமொழி பேசினார்.
எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழிTwitter

செய்தியாளர்: மணிசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் எம்.பி கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து எம்பி கனிமொழி பேசுகையில்...

“மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்த திமுக அரசு”

“வரும் நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். கஷ்டப்பட்டு போராடி நாம் பெற்ற உரிமைகளை பறிக்கின்றனர். மருத்துவத் துறையில் யார் வேண்டுமென்றாலும் படிக்கலாம் என்று கூறி இட ஒதுக்கீடு கொண்டு வந்தது திமுக. ஏழை எளிய மக்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் அரசு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதற்காக மாவட்டம் தோறும் அரசு மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்து இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பது தமிழகத்தில்தான். இதையெல்லாம் ஒழிக்கக் கூடிய வகையில்தான் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளனர்”

“ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கும்”

“ஒன்றிய அரசு கொண்டுவரும் புதிய கல்விக் கொள்கையால், அனைத்து கல்லூரி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற நிலையை உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தால் நமது பிள்ளைகள் எந்த கல்லூரிக்கும் போக முடியாத நிலை ஏற்படும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிக்கிறார், யார் தோல்வி பெறுகிறார் என்பதை தாண்டி, நம் குழந்தைகளின் எதிர்காலம் மற்றும் நாம் அமைதியாக வாழ்வதை முடிவு செய்யக் கூடிய தேர்தல் இது”

“பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”

“பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மதரீதியானது. மதத்தை வைத்து நமக்குள் சண்டையை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் அடைய வேண்டும் என்று நினைத்தால் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்? மணிப்பூரில் இரண்டு குழுக்கள் இடையே சண்டை. இதுவரை பிரதமர் மோடி அங்கு சென்று பார்க்கவில்லை. அந்த மாநிலத்தில் இருக்கும் எல்லோரும் வீட்டை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தங்கி அவதியுற்று வருகின்றனர். அங்கு குழந்தைகள், பெண்கள் எல்லோரும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறனர்”

“மழை, வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண வழங்கவில்லை”

“100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்திற்கு போதிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மேலும் அந்த திட்டத்திற்கான நிதி உதவிகளை தொடர்ந்து குறைத்துக் கொண்டிருக்கிறது. மக்களுக்கான திட்டங்களை மத்திய அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. மழை, வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட நிவாரண வழங்கவில்லை.

தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கக்கூடிய ஜிஎஸ்டி வரி பாக்கி 20 ஆயிரம் கோடி உள்ளது. பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகையை கூட கொடுக்க முடியாத நிலை வந்துவிடும்

“தமிழக அரசின் எந்த திட்டத்திற்கும் பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை”

“வெள்ள பாதிப்புக்கு நிதி கேட்டாலும் தருவதில்லை, வரவேண்டிய வரி நிலுவைத் தொகையும் தருவதில்லை, தமிழக அரசின் எந்தத் திட்டத்திற்கும் பாஜக அரசு நிதி கொடுப்பதில்லை. தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு இங்கு இருக்க கூடிய சகோதர சகோதரிகளுக்கு எதிராகவே இருக்கக்கூடிய ஆட்சிதான் மத்தியில் இருக்கும் பாஜக ஆட்சி. பாஜகவினர் தேர்தல் பிரசாரத்திற்கு வரும்போது எங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதி எங்கே என்று கேளுங்கள். மழை, வெள்ளத்தால் சென்னை தூத்துக்குடி பாதிக்கப்பட்ட போது எங்கே போயிருந்தீர்கள் என்று கேளுங்கள்

எம்.பி கனிமொழி
ராமநாதபுரம்: கடத்தல் தங்கம் கடலில் வீசப்பட்டதா? – 4 நாட்களாக தொடரும் தேடுதல் பணி

‘மழை வெள்ளத்தால் சேதமடைந்த எங்கள் வீட்டிற்கு முதல்வர் 4 லட்சம் ரூபாய் கொடுத்தார். நீங்கள் என்ன கொடுத்தீர்கள்’ என்று கேளுங்கள். இங்குள்ள பெண்கள் பொங்கி எழுந்தாலே அவர்களை ஓட வைக்க முடியும் என்பதை புரிய வைப்போம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி, இந்த நாட்டை பாதுகாக்கக் கூடிய வெற்றி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று கனிமொழி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com