\
மக்கள் இயக்கமே தடையை நீக்க வழி வகுத்தது: ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மக்கள் இயக்கமே தடையை நீக்க வழி வகுத்தது: ஆளுநர் வித்யாசாகர் ராவ்

மக்கள் இயக்கமே தடையை நீக்க வழி வகுத்தது: ஆளுநர் வித்யாசாகர் ராவ்
Published on

மக்கள் இயக்கமே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வழிவகுத்துள்ளதாக ஆளுநர் வித்யா சாகர் ராவ் கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டமுன்வடிவு உடனடியாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று தொடங்கிய ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் தொன்மையான பாரம்பரியத்திலும், கிராமப்புற பண்பாடு மற்றும் சமயக் கூறுகளிலும் முக்கிய அங்கமாக ஜல்லிக்கட்டு திகழ்வதாக கூறினார். மேலும், ஜல்லிக்கட்டு நாட்டு மாடுகளின் மரபினத்தை பாதுகாப்பதற்கும் வழிவகுப்பதாக அவர் தெரிவித்தார். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாகவும் ஆளுநர் கூறினார். ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உள்ள சட்டரீதியான தடைகளை நீக்குவதற்கு மாநில அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வித்யா சாகர் ராவ் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், அவர்களுக்கு ஆதரவாகத் திரண்ட பொதுமக்களும் மாநிலம் முழுவதும் தன்னெழுச்சியுடன், அமைதியான முறையில் ஆதரவை வெளிப்படுத்தியதாக ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். இந்த மக்கள் இயக்கமே ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வழிவகுத்துள்ளதாகவும் வித்யா சாகர் ராவ் கூறினார். இந்த முயற்சிகளில் வெற்றி கண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள ஆளுநர், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வாக, அவசரச் சட்டத்தை உறுதியானதாக மாற்ற, முறையான சட்ட முன்வடிவு உடனடியாகக் கொண்டு வரப்படும் என்றும் உறுதியளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com