ஆபத்தை உணராமல் யானைகளின் அருகே சென்று செல்ஃபி எடுத்த வாகன ஓட்டிகள்

ஆபத்தை உணராமல் யானைகளின் அருகே சென்று செல்ஃபி எடுத்த வாகன ஓட்டிகள்
ஆபத்தை உணராமல் யானைகளின் அருகே சென்று செல்ஃபி எடுத்த வாகன ஓட்டிகள்

சத்தியமங்கலம் அருகே சாலையோரம் முகாமிட்ட காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்கும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலை, தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அமைந்துள்ளது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் சுற்றித் திரிவதோடு சாலையோர வனப்பகுதியில் முகாமிட்டபடி தீவனம் உட்கொள்கின்றன.

இந்நிலையில் இன்று காலை ஆசனூர் அருகே காட்டு யானைகள் சாலையோரம் முகாமிட்டு தீவனம் உட்கொண்டிருந்தபோது அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் யானைகளை கண்டதும் வாகனத்தை விட்டு கீழே இறங்கி காட்டு யானைகளின் அருகே சென்று ஆபத்தை உணராமல் செல்போன்களில் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்தனர்.

காட்டுயானைகள் திடீரென மனிதர்களை தாக்கும் வாய்ப்பு உள்ளதை அறிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் வாகன ஓட்டிகள் கூட்டமாக யானைகளின் அருகே சென்று செல்ஃபி மற்றும் வீடியோ எடுத்த நிகழ்வு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த வாகன ஓட்டிகளை எச்சரித்தனர். யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே சென்று செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுக்கக்கூடாது என ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தும் வாகன ஓட்டிகள் வனவிலங்குகளின் அருகே சென்று புகைப்படம் எடுப்பதாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com