5 முறை மனு போட்டும் பலனில்லை - மாற்றுத்திறனாளி மகனுக்கு வாகனம் கேட்டு அலையும் தாய்
தன் மாற்றுத்திறனாளி மகனை படிக்கவைக்க இருசக்கர வாகன உதவிகேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு மகனை இடுப்பில் தூக்கிக்கொண்டு ஒரு தாய் சுமந்துவந்துள்ளார்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஏலமனம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சடையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் - இளவரசி தம்பதியர். விவசாய தொழில் செய்துவரும் சுப்பிரமணியனுக்கு லோகேஸ்வரன் (17), கேசவமூர்த்தி (14) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
மாற்றுத்திறனாளியான லோகேஸ்வரன் அக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து, தற்போது பதினோராம் வகுப்பு படிப்பதற்கு சடையம்பட்டியில் இருந்து மணப்பாறை அல்லது வையம்பட்டி பகுதிகளுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேல்படிப்பு படிக்க செல்லும் தனது மகனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மூன்று சக்கர வாகனத்தை வழங்கக்கோரி மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணப்பித்தும் இதுவரை கிடைக்கவில்லை.
இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மாற்றுத் திறனாளிக்கான நல உதவிகள் பெறுவதற்கும் 5 முறை விண்ணப்பித்து மனு அளித்துள்ளனர். தற்போதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால் அவர் தாயார் 6வது முறையாக தனது மாற்றுத்திறனாளி மகனுடன் நேரில்சென்று மனு அளித்தார்.
தன் மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த தாய் இளவரசி, மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயற்சித்தபோது மனு பெட்டியில் போட்டு செல்லுமாறு அதிகாரிகள் தெரிவித்ததால் மகனை அழைத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்.
தற்போது மீண்டும் அதிகாரிகள் அவரை அழைத்து மாற்றுத்திறனாளி அலுவலரை சந்திக்க கூறியுள்ளனர். இருந்தாலும் அவருக்கு இந்த வாகனம் கிடைக்க மாவட்ட ஆட்சியரின் உதவிவேண்டும் என்ற வேண்டுகோள் வைத்துள்ளார்.