ஈரோட்டில் போதைப்பொருட்கள் எளிதில் கிடைப்பதால் அதற்கு அடிமையாகி காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தரவேண்டி ஒரு தாய் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் நியூ டீச்சர்ஸ் காலனியில் சந்திரசேகர் - கீதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்திவரும் நிலையில் இவர்களின் மகன் யோகேஸ்வரன் தனியார் கலை அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் யோகேஸ்வரன் கடந்த 15ஆம் தேதி காணாமல் போய் உள்ளார். இதுகுறித்து வடக்கு போலீசாரிடம் புகார் அளித்தும் மகனை கண்டுபிடித்து தராமல் போதைக்கு அடிமையாகி உள்ளான் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மாணவர்கள் மத்தியில் எளிதில் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் ஊசி ஆகியவை கிடைப்பதாகவும் போலீசார் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டினார். மேலும் கஞ்சா விற்பது குறித்து நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால் கஞ்சா வியாபாரிகள் மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்காத போலீசாரை கண்டித்தும் போதையால் அடிமையாகி காணாமல் போன மகனை மீட்டு தரக்கோரியும் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். "எங்களுக்கு வேண்டாம் இலவசம். எங்களுக்கு வேணும் சந்தோஷமான வாழ்க்கை. ஆயிரம் போலீசார் வேண்டாம். இதை தடுக்க நேர்மையான ஒரு போலீஸ் போதும்" என்றவர், அவரை தடுத்த பெண் போலீசாரை பார்த்து "தாயின் தவிப்பு தெரிகிறதா? நீங்களும் ஒரு தாய் தானே" எனக் கேட்டு மனக்குமுறலை வெளிப்படுத்தினார். பின்னர் போலீசார் அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.