’விஜயை பார்த்துட்டுதான் வருவேன்’ - கணவரையும் மகளையும் அனுப்பிவைத்த பின் நெரிசலில் உயிரிழந்த பெண்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அடுத்த செம்மாண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (32). ஐடிஐ படித்த இவர் தனது வீட்டிலேயே மூன்று விசைத்தறிகளை வைத்து கூலிக்கு நெசவு செய்து வருகிறார். இவர் தாராபுரம் சாலை மோளக்கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த கோகுலப்பிரியா (28) என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கௌசவி என்ற 5 வயது மகள் உள்ளார்.
தம்பதி இருவரும் அருகில் உள்ளவர்களிடம் மிகவும் அன்பாக பழகும் குணம் கொண்டவர்களாகவே இருந்துள்ளனர். கோகுல பிரியா மற்றும் ஜெயபிரகாஷ் என இருவரும் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்களாக இருந்து வந்துள்ளனர். மேலும் அவர் கட்சி துவக்கிய பின்னர் தமிழக வெற்றி கழகத்திலும் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் கரூரில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில், பரப்புரை நடக்கும் இடம் தங்கள் வீட்டில் இருந்து 45 கிலோமீட்டர் மட்டுமே தொலைவு என்பதால் விஜயை பார்க்க வேண்டும் என கோகுல பிரியா வற்புறுத்தி உள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெயபிரகாஷ் கோகுலப்பிரியா இருவரும் தங்களது மகள் கௌசவி உடன் ஒரு இருசக்கர வாகனத்திலும், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் அப்பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் என புறப்பட்டு சென்றுள்ளனர்.
நான் விஜயை பார்த்துட்டு தான் வருவேன்..
பிற்பகல் ஒரு மணி முதல் அங்கு காத்திருந்த நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்ய வந்த பொழுது அதிகபட்ச கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளை அழைத்துக் கொண்டு ஜெயபிரகாஷ் வெளியே செல்ல முயன்றுள்ளார், மேலும் கோகுல பிரியாவையும் அழைத்துள்ளார். ஆனால் நீங்கள் இருவரும் செல்லுங்கள் நான் விஜய்யை பார்த்து விட்டு தான் வருவேன் என தெரிவித்த கோகுல பிரியா கூட்டத்தில் இருந்தபடி விஜயை பார்க்க முயன்றுள்ளார்.
அடுத்த சில நிமிடங்களில் அந்த பகுதியில் ஏற்பட்ட நெரிசலில் கோகுல பிரியாவை காணவில்லை என அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரகாஷ், ஒவ்வொரு இடமாக தேடி அலைந்துள்ளார். மேலும் அருகில் இருந்த மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த பின்னர், போலீசார் உதவியுடன் அவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்ததை கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊரான செம்மாண்டம் பாளையம் எடுத்துவரப்பட்டு தகனம் செய்யப்பட்டது. ஐந்து வயது மகள் இன்னும் பள்ளி படிப்பை முழுமையாக துவங்காத நிலையில் தனியே எப்படி வளர்ப்பேன் என ஜெயப்பிரகாஷ் கலங்கி நின்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தாய் இறந்தது அறியாமல் பக்கத்து வீட்டில் அமர்ந்து தனியே உணவு உட்கொண்ட குழந்தையை கண்டவர்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆட்பட்டனர்.
கணவனையும் மகளையும் நீங்கள் போங்கள் நான் விஜயை பார்த்து விட்டு தான் வருவேன் என சொன்னவர் இன்று இல்லாமலே போனது கிராம மக்களின் இதயங்களை கனக்க வைத்துள்ளது .