வறுமையை உணராத மகன்... எரித்துக் கொன்ற தாய் கைது..!
மதுரை மாவட்டம் காளிகாப்பான் கிராமத்தில் பணம் கேட்டு தொல்லை கொடுத்த மகனை பெற்ற தாயே எரித்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காளிகாப்பானைச் சேர்ந்த சரோஜா கூலி வேலை பார்த்து மகன் அஜித்தை கல்லூரியில் படிக்க வைத்தார். குடும்பத்தின் வறுமை நிலையை உணராத அஜித் உடன் படிப்பவர்களில் சிலரைப் போல ஆடம்பரமாக வாழ நினைத்து அடிக்கடி சரோஜாவிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. சரோஜாவும் தன்னால் இயன்ற வரை மகன் கேட்ட பணத்தை கொடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அஜித் 20 ஆயிரம் ரூபாய் கேட்டதாக தெரிகிறது. பணம் இல்லை என்று கூறியும் ஏற்காமல் அஜித் தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரோஜா உறங்கிக் கொண்டிருந்த மகன் அஜித் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்ததாகச் சொல்லப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரோஜாவை ஒத்தக்கடை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.