
குடும்பப் பிரச்னை காரணமாக இரண்டு குழந்தைகளை ஆற்றில் தள்ளி விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற தாய் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
தஞ்சை சேவப்பநாயக்கன்வாரி இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுரேஷ் (40). இவரது மனைவி செந்தமிழ்செல்வி (38). இவர்களுக்கு சுவேதா (12). கோகுல் செழியன் (4) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவி இடையேயான குடும்பப் பிரச்னை இருந்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்த தமிழ்ச்செல்வி இன்று காலை தனது இரண்டு குழந்தைகளையும் செவப்ப நாயகன்வாரி கல்லணை கால்வாய் ஆற்று பாலத்தில் இருந்து தள்ளிவிட்டு தானும் குதித்துள்ளார்.
ஆற்றில் விழந்த குழந்தைகள் தண்ணீரில் தத்தளித்து கதறியுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் ஆற்றில் குதித்து அவர்களை மீட்க முயன்றனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த தஞ்சை தீயணைப்பு துறையினர் ஆற்றில் குதித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் செல்வியை மட்டுமே அவர்களால் மீட்க முடிந்தது. அவரது இரண்டு குழந்தைகளை தேடும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் செல்வி மற்றும் சுரேஷை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.