துபாயில் இறந்த கணவர்: விஷப் பாலை குழந்தைகளுடன் குடித்த தாய்!
மன்னார்குடியில் வறுமையின் கொடுமை தாங்காமல் குழந்தைகளுடன் தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த தம்பதி ஆலமுத்து மற்றும் தமிழரசி. இவர்களுக்கு ஹியாம் (11) என்ற மகனும், மணிஷா (6) என்ற மகளும் உள்ளனர். குழந்தைகளின் படிப்பு, வீட்டின் தேவை இவற்றிற்கு போதிய வருமானம் இல்லாததால், துபாயில் பணிபுரிய ஆலமுத்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஆலமுத்து துபாயில் இறந்துவிட்டார். அதுவரை துபாயில் இருந்து வந்த பணத்தில் இயங்கிக் கொண்டிருந்த அவரது குடும்பம், வறுமையில் மூழ்கத் தொடங்கியது.
பள்ளிக் கட்டணம் கட்டுவதே கடினம் என்ற நிலையையும் தாண்டி, உணவிற்கே திண்டாட்டம் என்ற பரிதாப நிலையை தமிழரசியும், அவரது இரண்டு குழந்தைகளும் அடைந்தனர். இதனால் மனமுடைந்த தமிழரசி தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வது என்ற விபரீத முடிவுக்கு வந்தார். இதற்காக குழந்தைகள் குடிக்கும் பாலில் விஷத்தை (எலி மருந்து) கலந்த அவர், குழந்தைகளுடன் சேர்ந்து தானும் அந்த விஷப் பாலை குடித்துள்ளார். இதையடுத்து விடிந்து நீண்ட நேரமாகியும் தமிழரசி வீட்டை விட்டு வெளியே வராததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கதவைத் திறந்து பார்த்துள்ளனர். அப்போது தாயும், குழந்தைகளும் உயிருக்கு போராடிய நிலையில் இருந்ததைப் பார்த்த அவர்கள், உடனே மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதற்கட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு தற்போது தாயும், குழந்தைகளும் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.