தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..!

தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..!
தூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..!

சென்னையின் பல இடங்களிலும் கொசுக்கள் தொல்லை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கொசுக்களை ஒழிக்க அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னைவாசிகள் வலியுறுத்தியுள்ளனர்.

பங்குனி பிறந்தாச்சு.. வெயில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சென்னையிலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. பகலில் வெளியில் செல்ல வேண்டுமென்றால் குடை வேண்டும். இரவில் என்றால் புழுக்கத்திற்கு ஃபேன் ஓட வேண்டும் என்ற நிலையில் மக்கள் உள்ளனர். தர்பூசணி, கிர்னி என குறைவான விலையில் கிடைக்கும் பழ ஜூஸ்களை அவ்வப்போது குடித்து உடல் சூட்டை தணித்துக்கொண்டாலும் சென்னையில் தற்போது பெரிய பிரச்னையாக கொசுக்கள் தொல்லை உருவெடுத்திருக்கிறது. தூங்காத கொசுக்கள் மக்களை தூங்க விடாமல் அச்சுறுத்துகின்றது. பொதுவாக மழை காலத்தில், குளிர் காலத்தில் கொசுக்கள் தொல்லை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது கோடை வெயில் துவங்கியுள்ள இந்த நேரத்திலும் கொசுக்கள் தொல்லை மக்களை பாடாய்படுத்துகிறது. இரவுநேரங்களில் அலுவலக காவலாளிகளால் ஒரு இடத்தில் நின்று வேலை செய்ய முடியவில்லை. பல இடங்களில் தீயிட்டு கொளுத்தி அதன்மூலம் வரும் புகையால் அவர்கள் கொசு தொல்லையிலிருந்து ஓரளவிற்கு தங்களை காத்துக் கொள்கின்றனர்.

பிறந்த குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என்று ஒருவரையும் விடாமல் தன் பங்கிறது கொசுக்கள் தன் வேலையை செய்துவிட்டு செல்கிறது. பொதுவாக கொசுக்கள் மூலம்தான் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவுகின்றன. தமிழகத்தில் கடந்தாண்டு டெங்குவிற்கு உயிரிழப்புகள் என்னவோ அதிகம்தான். தற்போது பெருகி வரும் கொசுக்கள் தொல்லையால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கொசுத் தொல்லைக்கு வீட்டில் கொசுவர்த்தி சுருள் வைக்கலாம். அல்லது கொசு ஃபேட் கூட பயன்படுத்தலாம். ஆனால் ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாப் என பொது இடங்கள் எங்கு சென்றாலும் கொசுக்கள் மற்றவர்கள் தலையை ஆய்வதை நம்மால் எளிதில் காண முடிகிறது. நம் தலை மீது ஆயும் கொசுக்களை மற்றவர்கள் வேடிக்கை பார்க்கின்றனர்.

டெங்கு உள்ளிட்ட நோய்கள் கொசுக்கள் மூலம் பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்கள் நோயின்றி வாழவும் கொசுக்களை ஒழிக்க வேண்டும். முழுமையாக கொசுக்களை ஒழிக்க முடியவில்லை என்றாலும் சென்னையின் பல இடங்களிலும் கொசு ஒழிப்பு பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கண்டுகொள்வார்களா அதிகாரிகள்..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com