வீட்டின் பின்புறத்தில் படையெடுத்த நல்ல பாம்புகள் - திடுக்கிட்ட உரிமையாளர்
புதுச்சேரி அடுத்த பாகூர் பகுதியில் கூலித் தொழிலாளியின் வீட்டின் பின்புறத்தில் 25-க்கும் மேற்பட்ட நல்ல பாம்பு குட்டிகள் பிடிபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி அருகே உள்ள பாகூர் பங்களா வீதியைச் சேர்ந்தவர் புவியரசன் (25). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது தாயாரும் சிமெண்ட் சீட் போட்ட வீடு ஒன்றில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து புவியரசன் வெளியே வந்தார். அப்போது வீட்டின் பின்புறத்தில் நல்ல பாம்பு குட்டிகள் ஊர்ந்து செல்வதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக இதுகுறித்து, அப்பகுதியில் பாம்பு பிடிக்கும் சமூக ஆர்வலரான விக்னேஷ் என்பவருக்கு வரவழைத்தனர்.
இதையடுத்து புவியரசன் வீட்டு பின்புறத்தில் தோண்டி பார்த்த போது, அங்கு ஏராளமான நல்ல பாம்பு குட்டிகள் இருந்தன. சுமார் 25-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர் லாவகமாக பிடித்தார்.
வீட்டுப் பின்புறத்தில் இருந்த நல்ல பாம்பு குட்டிகளை பிடித்து சென்ற பின்னரே புவியரசன் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு முட்டையிட்டு குட்டிகளை ஈன்ற நல்ல பாம்பு, இரை தேடி அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் குட்டிகளை தேடி நல்ல பாம்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அச்சமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிடிக்கப்பட்ட நல்ல பாம்பு குட்டிகளைப் பாகூர் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.