பைக்கில் சென்ற தாய், மகன் பரிதாப உயிரிழப்பு - சாலைப் பள்ளத்தால் நேர்ந்த சோகம்
கன்னியாகுமரில் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகேயுள்ள மார்த்தால் பகுதியைச் சேர்ந்தவர் மேரி சுகிலா (43). இவர் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் அஜய் (17) டிப்ளமோ படித்து வந்தார். இவர்கள் இருவரும் தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டின் துக்க நிகழ்ச்சிக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். எட்டாமடை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னே சென்ற டெம்போ ஒன்றை அஜய் முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது, ரோட்டில் ஏற்பட்டிருந்த பள்ளம் தெரிய வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டிருந்த டப்பாவில், இருசக்கர வாகனம் மோதாமல் இருக்க அஜய் உடனே திருப்பியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக டெம்போவின் பின் சக்கரத்தில் இருசக்கர வாகனம் சிக்கியது. இதில் தடுமாறி விழுந்த அஜய் மற்றும் அவரது தாய் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்த சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகியுள்ளன. இருசக்கர வாகனம் விபத்திற்குள்ளானதில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.