
சமீபத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த எம்எல்ஏ கருணாஸ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரியை அவதூறாகப் பேசியதாக கைது செய்யப்பட்ட கருணாஸ் பின் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில் உடல்நலக் குறைவால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இன்று அதிகாலை எம்.எல்.ஏ கருணாஸின் வீட்டைச்சுற்றி விடிய விடிய நெல்லை போலீசார் கண்காணித்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன. நெல்லை போலீசார் சென்னையில் முகாமிட்டு கருணாஸை தேடிவந்த நிலையில் தற்போது கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெல்லையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தேவர் பேரவையைச் சேர்ந்த முத்தையாவின் காரை சேதப்படுத்திய வழக்கு தொடர்பாக கருணாஸிடம் விசாரணை நடத்த நெல்லை காவல்துறையினர் சென்னை வந்துள்ளதாக கூறப்படுகிறது.