தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்கிறார். ஆளுநர் மாளிகையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான அணி அதிக இடங்களில் வென்றதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராகவும் பொறுப்பேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் காலை 9 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மு.க.ஸ்டாலினை தொடர்ந்து அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு மிகக்குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதவியேற்பு விழாவில் பிரமுகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவை ஒட்டி வாகன ஒத்திகை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் இல்லத்தில் தொடங்கி ஆளுநர் மாளிகை, கருணாநிதி நினைவிடம் வழியாக சென்று தலைமைச் செயலகம் வரை இந்த ஒத்திகை நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் பாதுகாப்பு அணிவகுப்பில் இடம் பெறும் வாகனங்கள் பங்கேற்றன. இதற்கிடையில் தலைமைச்செயலகத்தில் புதிய முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பணியாற்றும் அறைகளும் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளன. முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு அவர் அண்ணன் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்டாலின் முதல்வராவதை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் என நம்புவதாகவும் அழகிரி தெரிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் மகள் கயல்விழியும் பங்கேற்கவுள்ளனர்.