திமுக தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளதால் தான் வீட்டிற்கு செல்கிறோம் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக கருணாநிதி உடல்நிலை மோசமடைந்தால், காவிரி மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். பின்னர் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை தெரிவித்தது. இருப்பினும் தொண்டர்கள் கலைந்து செல்லாததால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு சிறிதி நேரம் பதட்டம் ஏற்பட்டது.
இதனையடுத்து மருத்துவமனை வளாகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதி உடல்நிலை சீராக இருக்கிறது என்றார். எனவே தொண்டர்கள் கலைந்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து கருணாநிதியின் குடும்பத்தினர் ஒவ்வொரும் வீட்டிற்கு சென்றனர். மு.க.அழகிரி செல்லும் போது, தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார், அதனால் தான் அனைவரும் வீட்டிற்கு செல்கிறோம் என்றார். இந்நிலையில் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள மு.க.ஸ்டாலின், தற்போது கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என தெரிவித்துள்ளார். எனவே திமுக தொண்டர்கள் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் கொடுத்துவிடாமல் அமைதி காக்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.