“போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைப்பு” - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு தேதி அறிவுறுத்தாததால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை குலமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “போலியோ சொட்டு மருந்து முகாம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி நடைபெறும். ஆனால் இந்தாண்டு மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு இதுவரை போலியோ சொட்டு மருந்து நடத்துவதற்கு தேதி அறிவிக்காததால் பிப்ரவரி 3 ஆம் தேதி நடக்க இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் இதற்கு தமிழக அரசு காரணம் அல்ல என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இன்னமும் போலியோ நோய் உள்ளதால், அந்த நாடுகளிலும் போலியோவை முற்றிலும் ஒழிக்கப்பட்ட பிறகு தான் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை உலக அளவில் நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்யலாம்.
இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லை. தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளாக போலியோ நோய் கிடையாது. இருப்பினும் உலகளவில் என்றைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது நிறுத்தப்படுகிறதோ அன்றைக்கு தான் அனைத்து நாடுகளிலும் போலியோ சொட்டு மருந்து கொடுப்பது நிறுத்தப்படுவது குறித்து ஆலோசிக்கபடும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இந்த ஆண்டு 72 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசின் தடுப்பு மருந்து தொழில்நுட்ப குழு அனுமதி அளித்த பின்னே போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.