“தலைக்கவசம் அணியாதது யதார்த்தமான நிகழ்வு” - விஜயபாஸ்கர் புது விளக்கம்
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பேற்கும் விதமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாக குற்றம்சாட்டி டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலையில் அமைச்சரின் செயல் குற்றம் என்று குறிப்பிட்ட அவர், விதி மீறலில் ஈடுபட்ட விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, யதார்த்தமாக நடைபெற்ற நிகழ்வை பெரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அமைச்சரின் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பாதுகாப்பிற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதி சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பொறுந்தும் என்று தெரிவித்தனர். தலைக்கவசம் அணியாமல் சென்றதற்கு பொறுப்பேற்கும் விதமாக பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். தவறினால் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்க நேரிடும் எனக் கூறி, வரும் 18-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

