குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்

குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்
குட்கா விவகாரம்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் சிபிஐ முன் ஆஜர்

குட்கா ஊழல் விவகார விசாரணைக்காக சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்

கடந்த 2016 ஆம் ஆண்டில் மாதவரத்தில் உள்ள ஒரு குட்கா குடோனில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் குட்கா ஊழல் விவகாரம் வெளிவரக் காரணமாக அமைந்தது. பின் இது குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து குட்கா ஊழல் வழக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாறியது.பின் கடந்த மே மாதம் சிபிஐ வழக்குப் பதிவு செய்து குட்கா ஊழல் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ விசாரனையில் மாதவ ராவிடம் இருந்த டைரியில் 44 கோடி ரூபாய் கையூட்டு பெற்றவர்களின் விவரங்கள் உள்ளதாக கூறப்பட்டது. 

அதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்ததாக தகவல் வெளியானது. அதனடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்திய சிபிஐ அதிகாரிகள் சுமார் 35 இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். 

இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. 

இந்நிலையில் இந்த வழக்கை விசாரணையை சிபிஐ தீவிரப்படுத்தியது. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு சிபிஐ 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து  3வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து இன்று காலை  நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜரானார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com