அதிமுக வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி ? - பாஜக வட்டாரம் தகவல்
அதிமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கத்திற்கு, புதிய மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படுவது உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் 303 இடங்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி, கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சந்தித்தார். சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சரவையில் யார் யாருக்கு இடம் அளிப்பது என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது. குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் வென்ற அமித் ஷாவுக்கு, அமைச்சரவையில் முக்கிய இலாகா வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதேபோல தற்போதைய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத்,பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. கூட்டணி கட்சிகளான சிவசேனா மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தலா இரு அமைச்சர் பதவிகளும், லோக் ஜன சக்தி மற்றும் சிரோன்மணி அகாலி தளம் கட்சிகளுக்கு தலா ஓர் இடமும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இதில் லோக் ஜன சக்தி சார்பில் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு, அக்கட்சி ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி வழங்குவது ஏறத்தாழ உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது. அமைச்சரவையில் மொத்தம் 65 பேர் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது.