செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கு: எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது சரியானது என உச்ச நீதிமன்ற தீர்ப்பளித்த பிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். அதன்பின் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12ஆம் தேதி ஆஜர்படுத்தபட்ட அவரை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப் பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத் துறை தாக்கல் செய்தது.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டுள்ளார். அதன்படி சிறப்பு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com