`நற்பெயருக்கு களங்கம்’- பாஜக தலைவரிடம் நஷ்ட ஈடு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

`நற்பெயருக்கு களங்கம்’- பாஜக தலைவரிடம் நஷ்ட ஈடு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி
`நற்பெயருக்கு களங்கம்’- பாஜக தலைவரிடம் நஷ்ட ஈடு கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

மதுபான கொள்முதல், விற்பனையில் கமிசன் பெறுவதாக பேசியதற்காக 10 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரி தமிழக பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் நிர்மல்குமாருக்கு தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தகவல் மற்றும் தொழில்நுட்ப பிரிவு தலைவராக உள்ள சி.டி.ஆர்.நிர்மல்குமார் அண்மையில் யூடியூப் சேனலொன்றுக்கு அளித்த பேட்டியில் டாஸ்மாக் மதுபான கொள்முதல் குறித்தும், விற்பனை குறித்தும் பேசியிருந்தார்.

அதில் துறையின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி கமிஷன் பெறுவதாக பேசியிருந்தார். மேலும், காந்தி ஜெயந்தி அன்று  தமிழகத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகவும், இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்திலும் நிர்மல்குமார் பதிவிட்டிருந்தார்.

நிர்மல்குமாரின் கருத்து எவ்வித அடிப்படை ஆதாரம் இல்லாமலும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பாக வழக்கறிஞர் ரிச்சர்டான் வில்சன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், சம்பந்தப்பட்ட ட்விட்டர் பதிவை நீக்க வேண்டுமெனவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், மான நஷ்ட ஈடாக 10 கோடி ரூபாய் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இவற்றை ஒரு வாரத்தில் செய்ய தவறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவுகளை நீக்கும்படி யூட்யூப் மற்றும் டிவிட்டர் நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விவரங்களுக்கும் நிர்மல் குமார் ட்விட்டர் வழியாக பதில் அளித்திருக்கிறார். அதில் அவர் “நான் என்ன 10 மதுபானக்கடைகள் வைத்திருக்கிறேனா என்ன? என்கிட்ட போய் 10 கோடி கேட்டிருக்காரு” என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com