செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டாரா? திமுக எம்.பி என்.ஆர்.இளங்கோ சொன்னதென்ன?
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை இல்லத்தில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், அவரை நள்ளிரவு 2 - 3 மணியளவில் கைது செய்தனர் அதிகாரிகள்.
இதற்கிடையே செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நெஞ்சில் கைவைத்தபடி கதறிய அவர், காரில் அவசர அவசரமாக சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. உடல்நலக்குறைவால் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.
இதையறிந்த திமுக எம்.பியும் வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ உடனடியாக மருத்துவமனை சென்று செந்தில் பாலாஜியை சந்திக்க சென்றார். தொடர்ந்து அந்த நேரத்திலேயே (2 - 3 மணியளவில்) செய்தியாளர்களை சந்தித்தார் என்.ஆர்.இளங்கோ.
அப்போது பேசிய அவர், “அமைச்சரை கைது செய்துள்ளோம் என்பதை இதுவரை அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை. வழக்கறிஞர்கள் கேட்டபோது கூட அவர்கள் பதில் சொல்லவில்லை. அமைச்சரை கைது செய்துள்ளோம் என்பதை சட்டப்படி அவரது உறவினர்களிடம் சொல்ல வேண்டும். ஆனால், அமலாக்கப்பிரிவு செய்தியாளர்களிடம் மட்டும்தான் சொல்லுது. அமலாக்கத்துறையினர் தன்னை துன்புறுத்தி இருப்பதாக அமைச்சர் சொன்னார். அவர் ஐசியு-வில் இருப்பதால் அவரை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை” என்றார்.