பள்ளிக்கல்வித் துறையில் 37 புதிய அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
பள்ளிக்கல்வித் துறை மானியக்கோரிக்கையில் இதற்கான அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டார். சட்டப் பேரவையில் அவர் வெளியிட்ட அறிவிப்பில், மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் புதிதாக 30 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும். ரூ.3 கோடி செலவில் 32 மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும். மாணவர்களின் பொது அறிவுத் திறனை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வாங்கப்படும். 4,084 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும். மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்ப அனுமதி வழங்கப்படும். கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு புதுமை பள்ளிகள் விருது வழங்கப்படும். மதுரையில் ஒரு லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும். 486 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினிவழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.