"அறநிலையத்துறை சார்பில் பிரம்மாண்டமாக மகாசிவராத்திரி கொண்டாட்டம்" -அமைச்சர் சேகர் பாபு

"அறநிலையத்துறை சார்பில் பிரம்மாண்டமாக மகாசிவராத்திரி கொண்டாட்டம்" -அமைச்சர் சேகர் பாபு
"அறநிலையத்துறை சார்பில் பிரம்மாண்டமாக மகாசிவராத்திரி கொண்டாட்டம்" -அமைச்சர் சேகர் பாபு

தமிழ்நாட்டில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கோயில்களில், மகா சிவராத்திரி விழா, பிரம்மாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தொடர்ந்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சென்றடைந்தார். அங்கு, மகா சிவராத்திரியை ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் கொண்டாட இந்து சமய அறநிலையத்துறையால் தேர்வு செய்யப்பட்ட இடத்தை அவர் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, “வரும் சிவராத்திரி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் 5 பிரசித்தி பெற்ற கோயில்களில் அறநிலையத்துறை சார்பில் சிவராத்திரி விழா பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் உட்பட மாநிலத்தில் உள்ள 5 பிரசித்தி பெற்ற கோயில்களில் சிவராத்திரி விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி சிவராத்திரியை கொண்டாடும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிகள், ஆன்மீக பட்டிமன்றங்கள், ஆன்மீகம் சார்ந்த ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோவில் அருகிலுள்ள எருமைகடா மைதானத்தில் வைத்து சிவராத்திரி விழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் போது தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை சேர்ந்த மாதிரி அரங்குகள் அமைக்கவும், அந்தக் கோயில்களில் வழங்கப்படும் பிரசாதங்கள் போல் இங்கே வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் உத்தரவின் பேரில், இந்த சிவராத்திரி விழாவில் தொன்மையான கோயில்களின் வரலாறுகள்,  புதுப்பிக்கப்பட்ட 108 கோயில் புத்தகங்கள், 13 போற்றிப் புத்தகங்கள் ஆகியவை இடம்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. மேலும், தென் மாவட்டங்களில் உள்ள தொன்மையான கோயில்களில் இருக்கும் இசைக்கருவிகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. அத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒன்று கூடும் சிவராத்திரி விழாவில் தேவையான அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் உள்ளிட்டவைகள் மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com