“கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள்” - அமைச்சர் முத்துசாமி பேச்சு

அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.
அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமிகோப்பு புகைப்படம்

கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் முத்துசாமி மிதிவண்டிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு அன்றாடம் பயன்படும் வகையிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் 260 கோடி ரூபாய் மதிப்பில் 567 கி.மீ.க்கு சாலைகள் அமைக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் 7,000 சைக்கிள் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

மற்றவர்களுக்கும் மிக விரைவில் சைக்கிள் வழங்கப்படும். மாணவர்கள் சைக்கிளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். பள்ளிக்கு வரும்போது போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை செய்ய முகாந்திரம் இல்லை. இந்த சோதனை திட்டமிட்டு செய்யப்படுகிறது. இதனால் யாரும் தொய்வடைந்து விட போவதில்லை. அமைச்சர் பொன்முடியிடம் தவறு இருக்க முடியாது என எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. இதில் இருந்து அவர் மிக விரைவில் மீண்டு வருவார். அமலாக்கத்துறை சோதனைகளால் எங்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட முடியாது. எங்களது கவனத்தை திசைதிருப்ப முடியாது.

பெங்களூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் எதிர்க்கட்சி கூட்டம் சிறப்பாக நடக்கும். கோவை மத்திய சிறைச்சாலை இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு செம்மொழி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

டாஸ்மாக் கடைகளை காலை 7 மணிக்கு திறப்போம் என ஒரு இடத்தில் கூட நாங்கள் எதுவும் சொல்லவில்லை. டாஸ்மாக் தொழிலாளர்கள் பிரச்னை தீர்ந்தால் தான் நிம்மதியாக வேலை செய்ய முடியும். தொழிலாளர்கள் பிரச்சனைகளை தீர்க்க 18 தொழிற்சங்கங்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை ஆய்வு செய்து, அவற்றில் உடனடியாக தீர்க்கும் பிரச்னைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் ஒப்பந்தம் போட தயாராக உள்ளோம். மது பாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வசூலிக்க கூடாது எனத் திட்டவட்டமாக சொல்லியுள்ளோம்.

அமைச்சர் முத்துசாமி
அமைச்சர் முத்துசாமி

தொழிலாளி பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களின் முதல் இலக்கு. மது பாட்டில்களால் பல்வேறு பிரச்னைகள் வருவதால், டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்கிறோம் என்று தான் சொன்னோம். ஆலோசனைகளை அன்பாக சொன்னால் கேட்டுக்கொள்வோம். அதற்கு ஏன் திட்டுகிறார்கள்? நான் இரண்டு நிமிடம் பேசியதை அரை நிமிடம் எடுத்தால் தவறாக தான் வரும். மதுபாட்டில்கள் சேதமடைவது, கலப்படம் செய்ய வாய்ப்பிருக்கிறது என சொல்லப்படுகிறது. அதனால் டெட்ரா பேக் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்து, கருத்துகள் கேட்டே கொண்டு வரப்படும்.

டெட்ரா பேக், 90 மி.லி. மது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அவை வந்தாலும் வரலாம். வரமாலும் போகலாம். காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் என்று சொல்வதை பொறுத்து கொள்ள முடியாது. கடுமையான வேலை செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் மது அருந்துகிறார்கள். அவர்கள் செய்யும் வேலை மட்டும் வேண்டுமா? வீட்டை விட்டு நாம் வெளியே வரும்போது சாக்கடை அடைத்திருந்தால், மீண்டும் வீட்டுக்குள் செல்கிறோம். எனில் சாக்கடை அடைப்பை சரிசெய்வது யார்? அப்படியானவர்கள் மது அருந்துகிறார்கள். அவர்களை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள்? இதனைத் தவிர்க்க மாற்று வழி ஆலோசனைகளை சொல்லுங்கள்.

டாஸ்மாக் மூலம் பெரிய வருமானம் ஈட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லை. சட்ட விரோதமாக மது வாங்கி தவறு நடக்கக்கூடாது. மதுக்கடையில் காத்திருப்பதை தவிர்க்க 90 மி.லி. மது கொண்டு வர ஆய்வு செய்யப்படுகிறது. மது குடிப்பவர்களை படிப்படியாக நமது பக்கம் கொண்டு வர வேண்டும். எந்த திட்டத்தையும் யாரையும் பாதிக்காத வகையில் செய்வோம். சிறிய நூற்பாலைகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. அதன் முடிவு விரைவில் வெளியிடப்படும்” எனத் தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com