“ சென்னையில் ‘வீராவேசம்’ டெல்லியில் மவுனம்”- அன்புமணியை சாடிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

“சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?”- எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“சென்னையில் வீராவேசம் செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் மவுனம் சாதிப்பது ஏன்?” என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போராட்டம் என்ற பெயரில் காவல்துறையினர் மீது கல்வீசி, பொது சொத்துகளை சேதப்படுத்தி, அமைதியாக இருக்கும் உழவர்களைத் தூண்டிவிட்டு அரசுக்கு எதிராக சதித்திட்டத்தை அன்புமணி ராமதாஸ் உருவாக்கி வருகிறார்.

‘என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தை கைவிடும் எண்ணம் இல்லை’ என ஒன்றிய நிலக்கரித்துறை அமைச்சர் மாண்புமிகு பிரகலாத் ஜோசி மாநிலங்களவையில் அறிவித்திருக்கிறார். அதுவும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் M.P கேட்ட கேள்விக்கு அவ்வாறு எழுத்துப்பூர்வமான பதிலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் ‘வீராவேசம்’ செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? டெல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மருத்துவக் கல்லூரி வழக்கா? அல்லது அந்த நிலுவையில் உள்ள வழக்கை வைத்து அமலாக்கத்துறை கைது செய்துவிடப் போகிறது என்ற கலக்கமா?

இங்கே ‘மண்ணையும், மக்களையும் காப்போம்’ என்றவர் டெல்லியில் முகத்திற்கு நேராக, ‘என்.எல்.சி விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடமாட்டோம்’ என்று ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர், அதுவும் அன்புமணி ராமதாசே விரும்பி இடம்பெற்றுள்ள ‘டெல்லி தேசிய ஜனநாயகக் கூட்டணி’யின் அமைச்சர் அறிவித்த பிறகும், எழுத்துப்பூர்வமாக மாநிலங்களவையில் தெரிவித்த பிறகும், பெட்டிப் பாம்பு போல் அடங்கி கிடப்பது ஏன்?

தைரியம் இருந்திருந்தால், அவர் சென்னையில் பேசுவதும் - போராடுவதும் உண்மையென்றால், குறைந்தபட்சம் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பாவது செய்திருக்க வேண்டாமா? அதிகபட்சமாக ‘இனி நாங்கள் டெல்லி அளவில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் இல்லை’ என்று அறிவித்துவிட்டு விமானம் ஏறிச் சென்னைக்கு வந்திருக்க வேண்டாமா?

அப்படியெல்லாம் அன்புமணி ராமதாஸ் அவசரப்படமாட்டார் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் அப்படி அவசரப்பட்டால் மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை வந்து தன் வீட்டுக் கதவை தட்டும் என்பது அவருக்குத் தெரியும்” என்றுள்ளார் காட்டமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com