“தெய்வப் புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை”- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்..!
தெய்வப் புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள் கூறப்பட்டிருந்தது. குறளுக்கான விளக்கம் ஒன்றினையும் பதிவிட்டிருந்தது. அத்துடன், திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ள படத்தையும் பதிவிட்டிருந்தனர்.
அந்த படத்தில் வள்ளுவர் திருநீர் பூசி, ருத்ராட்சம் அணிந்த நிலையில் இருந்தார். வழக்கமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில், திருவள்ளுவர் வெண்மை நிற ஆடை அணிந்திருப்பார். ஆனால் இந்தப் பதிவில் காவி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்ததால் இதற்கு திமுக, கம்யூனிஸ்ட்உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் இதுகுறித்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “வள்ளுவருக்கு முதல் வடிவம் தந்தவர் பிரிட்டிஷ் அரசு Mint தலைவரான எல்லிஸ் பிரபு 1800களில்! தங்க நாணயத்தில் வார்த்தெடுக்கப்பட்ட இந்த தியான உருவம் சமணத் துறவியாகவோ, சைவ/வைணவ ஞானியாகவோ இருக்கலாமே தவிர, கடவுள் வாழ்த்து படைத்த தெய்வப்புலவர் நாத்திகராக இருக்க வாய்ப்பே இல்லை!” எனப் பதிவிட்டுள்ளார்.