ரேஷன் அரிசியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறோம் - அமைச்சரிடம் தெரிவித்த மூதாட்டி!

ரேஷன் அரிசியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறோம் - அமைச்சரிடம் தெரிவித்த மூதாட்டி!
ரேஷன் அரிசியை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுகிறோம் - அமைச்சரிடம் தெரிவித்த மூதாட்டி!

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமாக உள்ளது எனவும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக சாப்பிடுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் மூதாட்டி ஒருவர் பாராட்டு தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் பெருந்தரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட குளிக்கரை பகுதியில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பூண்டி கலைவாணன் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தினை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றி திறந்துவைத்தார். தொடர்ந்து நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து சோதனை மேற்கொண்டார். பின்னர் பயனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது அரிசி வாங்க வந்த அமிர்தவள்ளி என்ற மூதாட்டி நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமாக இருப்பதாகவும், குடும்பத்துடன் சேர்ந்து நன்றாக சாப்பிடுவதாகவும் கூறி தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்ததாவது,

’’இங்கு அரிசி வாங்க வந்த மூதாட்டி அரிசி மிகவும் தரமாக இருப்பதாகக் கூறி எங்களுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆட்சிப் பொறுப்பேற்ற 14 மாதங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட 500 வாக்குறுதிகளில் 200க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழக மக்களுக்கு பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறோம்’’ என்றார்.

தொடர்ந்து பெருந்தரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் தமிழக அரசுக்கு கடம்பங்குடி, குளிக்கரை, தோப்புத்துறை பகுதிகளில் பகுதிநேர அங்காடி அமைக்க கோரிக்கை விடுத்தார். உடனடியாக பகுதி நேர அங்காடி பிரிக்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர், பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பாத்திமா சுல்தான் மூலமாக அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com