சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்!
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5, 8-ஆம் வகுப்புகளில் இனி 30 சதவீதம் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை வரும் கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. மாற்றுகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், “தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. தேசியக் கல்வி கொள்கையை தமிழகம் எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். 5, 8-ஆம் வகுப்பு மாணவர்கள் தோல்வியடைந்தால், மீண்டும் அதே வகுப்பை அந்த மாணவர்கள் படிக்க வேண்டிவரும். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் உருவாகும். இப்படி மாணவர்கள் தோல்வியடையும்போது மீண்டும் அதே வகுப்பை படிக்கவைத்தல் இடைநிற்றலையும் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.