\
minister Aadhav Arjunas speech on other parties joining
ஆதவ் அர்ஜுனாபுதிய தலைமுறை

”இன்னும் ஒரு மாசம்தான்.. 90% அதிமுக நிர்வாகிகள் தவெகவில்..” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

இன்று காலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தவெகவில் இணைந்தார். தொடர்ந்து, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.
Published on

தமிழக சட்டசபைத் தேர்தலில் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. இந்தச் சூழலில், மாற்றுக் கட்சியினர் பலரும் தவெகவில் ஐக்கியமாகி வருகின்றனர். தவெகவுக்கு மாற்றுக் கட்சியினர் வருவது ஏன் என்பது குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கருத்து தெரிவித்துள்ளார்.

minister Aadhav Arjunas speech on other parties joining
அமைச்சரவையில் இடம்; விசிகவுக்கு அழைப்பு.. ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?

2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. குறிப்பாக, எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெறவில்லை. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவிய நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கியது. இதற்கிடையே இருதரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மட்டும் இந்தக் குழுவினரோடு இணையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி, தவெகவில் போய் இணைந்தனர்.

தவிர, இன்று காலையில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் தவெகவில் இணைந்தார். தொடர்ந்து, அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகளும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைந்தது குறித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “பொதுச் செயலாளரின் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு எதிராக இருந்தது. அதனால்தான் 14-15 தோல்விகள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒரு பெரிய சூழ்ச்சி நடந்தது. அது, திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைப்பது பற்றிய சூழ்ச்சி. இந்த சூழ்ச்சி, அதிமுகவின் உண்மையான தொண்டர்களிடம் தலைமை மீதான அதிருப்தியை உருவாக்கியது. மக்கள் உங்கள் தலைமையை மூன்றாவது இடத்துக்குத் தூக்கிப் போட்டுள்ளனர். எந்த எம்.எல்.ஏவையும் தவெக ஆப்பர் கொடுத்து அழைக்கவில்லை. அப்படியான தலைமை எங்களுக்குக் கிடையாது.

எங்கள் மீது நம்பிக்கைவைத்தே அவர்கள் வருகிறார்கள். மாற்றுக் கட்சியினருக்கு சொந்த குடும்பம் மாதிரி மரியாதை கொடுக்கப்படுகிறது. இதைப் பார்த்துதான் அவர்கள் வருகிறார்கள். இதுதான் உண்மையான அதிமுக. தவெக என்பது ஒரு குடும்பம். அதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை. இதன் காரணமாகத்தான் 90 சதவிகித அதிமுக தொண்டர்கள் திமுகவை தூக்கி எறிவதற்காக, தவெகவுடன் சேருவதற்குத் தயாராகி விட்டார்கள். தவெகதான் உண்மையான எதிர்காலம். தமிழகத்தில் ஒரேயொரு தலைமைதான் இருக்கிறது. வேறு எந்த தலைமையும் நேர்மையாக இல்லை. எழுதிவைத்துக் கொள்ளுங்கள், இன்னும் ஒரு மாதத்திற்குள் 90 சதவிகித அதிமுக நிர்வாகிகள் எல்லோரும் தவெகவிற்கு நோக்கிச் செல்ல வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்கூட்டியே கொடுத்துவிட்டார்கள்” என்றார்.

minister Aadhav Arjunas speech on other parties joining
தவெகவுக்குப் படையெடுக்கும் அதிமுகவினர்.. பட்டியலில் இணைந்த Ex அமைச்சர்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com