கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்தவர் கமல இருதயராஜ். இவர் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 9 பேருடன் புதுக்கோட்டையில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சாமி கும்பிட மினி சரக்கு வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில், வழிபாட்டை முடித்துவிட்டு மினி சரக்கு வாகனத்தில் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் கமல இருதயராஜ் குடும்பத்தினர் பயணித்த மினி சரக்கு வாகனம் மீது நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், இருதயராஜின் மினி சரக்கு வாகன ஓட்டுநர் வினோத், ரூபி தேவிகா, நதியா, முத்துலட்சுமி ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து தகவல் அறிந்து அங்கு வந்த தென்னிலை காவல் நிலைய போலீசார் மற்றும் சாலையில் சென்றவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.