மேட்டுப்பாளையம்: சாலையில் சென்ற வாகனத்தை வழிமறித்த காட்டு யானை
மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரத்தில் சாலையில் சென்ற வாகனத்தை காட்டு யானை வழிமறித்ததால் ஓட்டுநர் அச்சமடைந்தார்.
காட்டு யானைகளின் வலசை காலம் என்பதால் கோவை மாவட்டத்தின் மலையடிவார பகுதிகளில் காட்டு யானகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், ஆனைக்கட்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியாக யானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
இந்நிலையில் வனத்தை ஒட்டியுள்ள சாலைகள் மற்றும் மலையடிவார சாலைகளில் பயணிப்போர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையில் சரக்கு வாகனம் சென்றுள்ளது.
அப்போது சாலையோரம் ஆண் காட்டு யானை நிற்பதை கண்ட ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்தி விட்டார். இந்நிலையில் யானை மெல்ல மெல்ல வாகனம் அருகே வந்தது கண்ணாடியின் மீது தலையை உரசியபடி நின்றது. இதனால் அச்சத்தில் உறைந்த வாகன ஓட்டுநர் அமைதியாக இருந்தார்.
அச்சத்தில் இருந்த ஒட்டுநர், யானையை விரட்டும் நோக்கில் வாகனத்தின் ஹாரனை ஒலிக்காமலும், வாகனத்தில் இருந்து இறங்கி ஓட முயற்சிக்காமலும் அமைதியாக இருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

