மேகதாது அணை பிரச்னை: மத்திய அரசிடம் முறையிட்ட தமிழ்நாடு; பிடிவாதம் காட்டும் கர்நாடகா

மேகதாது அணை பிரச்னை: மத்திய அரசிடம் முறையிட்ட தமிழ்நாடு; பிடிவாதம் காட்டும் கர்நாடகா
மேகதாது அணை பிரச்னை: மத்திய அரசிடம் முறையிட்ட தமிழ்நாடு; பிடிவாதம் காட்டும் கர்நாடகா

தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் உறுதியளித்திருப்பதாக தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதேவேளையில், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை டெல்லியில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, கர்நாடகாவின் மேகதாது அணை, மார்கண்டேய நதியில் புதிய அணை உள்ளிட்ட பிரச்னைகளை முறையிட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

முதலாவதாக காவிரியில் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று அமைச்சர் முறையிட்டார். கர்நாடகாவுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்துமாறு கூறியதை மத்திய அமைச்சர் ஏற்றதாக கூறினார். இதையடுத்து மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி குறித்து கூறியதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

மூன்றாவதாக மார்கண்டேய நதியில் கர்நாடகம் கட்டிய அணை குறித்து எடுத்துரைத்து நடுவர் மன்றம் அமைக்குமாறு கூறியதை மத்திய அமைச்சர் ஏற்றதாக துரைமுருகன் கூறினார். அடுத்து காவிரி ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவர் இல்லை என்று முறையிட்டதாகவும், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதில் உள்ள பிரச்னை குறித்தும் பேசியதாக அமைச்சர் துரைமுருகன் குறிப்பிட்டார். 

கோதாவரி - காவிரி இணைப்பு இதுவரை நடக்காத நிலையில், தமிழ்நாட்டுக்குள் காவிரி - குண்டாறை இணைக்க நிதி தருமாறு கேட்டிருப்பதாகவும், தாமிரபரணி - கருமேனியாறு இணைப்புத் திட்டதுக்கு நிதி ஒதுக்கக் கோரியும் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத்திடம் வலியுறுத்தியதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். 

30 நிமிடங்கள் நீடித்த சந்திப்பு திருப்தி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து விட்டு தமிழ்நாடு இல்லத்திற்கு திரும்பிய அமைச்சர் துரைமுருகனை, தமிழ்நாடு பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இல்லத்தின் வாயிலில் சந்தித்தனர். இருதுருவங்கள் சந்திப்பு என அருகிலிருந்தவர்கள் கூறியபோது, தமிழ்நாட்டை விட்டு தாண்டினால் எல்லாம் ஒன்றுதான் என்று தனது பாணியில் கூறினார் அமைச்சர் துரைமுருகன். 

எடியூரப்பா திட்டவட்டம்: 

இதனிடையே, மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு நிச்சயம் செயல்படுத்தும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் இருப்பதாக கூறினார். மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக மக்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் என்றும் அத்திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் என்றும் எடியூரப்பா தெரிவித்தார். 

மேலும், சட்ட நடைமுறைளுக்கு உட்பட்டு மேகதாது அணை கட்டப்படும் என்றும் இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேகதாது அணை திட்டத்தை எதிர்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சரை நட்பு ரீதியில் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் எடியூரப்பா கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com