நீலகிரி: விடுமுறையில் வீடு வந்தபோது விபரீத முடிவு எடுத்த மருத்துவ மாணவி.. சோகத்தில் பெற்றோர்!

நீலகிரி: விடுமுறை காலத்தில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி, வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் கிடைத்த கடிதத்தை வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
உயிரிழந்த மாணவி
உயிரிழந்த மாணவிபுதியதலைமுறை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் கல்பனா காட்டேஜ் பகுதியை சேர்ந்தவர் கணேசமூர்த்தி - மல்லிகா தம்பதி. இந்நிலையில், கணேசமூர்த்தி அரவேணு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு சந்தியா (25) மற்றும் ஸ்ரீநிதி(21) ஆகிய இரு மகள்கள் இருந்தனர். ஸ்ரீநிதி, கோவை தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீநிதி கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊரான கோத்தகிரிக்கு வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று காலை ஸ்ரீநிதியின் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில், ஸ்ரீநிதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மதிய வேளையில் ஸ்ரீநிதியின் தந்தை கணேசமூர்த்தி ஸ்ரீநிதிக்கு ஃபோன் செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது நீண்ட நேரமாக போன் எடுக்காததால் அக்கம்பக்கத்தினரை அழைத்து தனது மகள் வீட்டில் உள்ளாரா என்று பார்க்க சொல்லி இருக்கிறார். அப்போது அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததும், நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்காததால் வீட்டின் ஜன்னல் வழியே அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அப்போது, ஸ்ரீநிதி தனது வீட்டில் உள்ள அறையில் துப்பட்டாவைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ந்து உடனடியாக பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே, தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஸ்ரீநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்பு வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதத்தை வைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறை காலத்தில் வீட்டுக்கு வந்த மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவி
”ஜல்லிக்கட்டில் மாடுகளின் உரிமையாளர் பெயரோடு சாதி பெயரை குறிப்பிடக்கூடாது” - நீதிமன்றம் உத்தரவு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com