பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் - வைகோ அறிவிப்பு
பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட வைகோ விழாவினை நடத்தி வைத்தார். பின்னர் திருமண நிகழ்ச்சியில் பேசியபோது, “மத்திய அரசு டெல்டா மாவட்டங்களை வேளாண் மண்டலமாக அறிவிக்காமல் பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து இயற்கை எரிவாயுகளை எடுக்க திட்டமிட்டுள்ளது, தற்போது மேகதாதுவில் உச்ச நீதிமன்றமே தடுத்தாலும் கர்நாடக அணை கட்டியே நீரும். அதற்கு மத்திய அரசு மறைமுகமாக ஆதரவு அளித்து வருகிறது, டெல்டா மாவட்டங்களில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு எடுத்தால் நாட்டிற்கு வருமானம் கிடைக்கும், ஆனால் டெல்டா மாவட்டம் அழிந்துவிடும்.
கஜா புயல் கோரத்தாண்டவம் ஆடி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், இதுவரை பிரதமர் வந்து பார்க்கவில்லை, இதுவரை 132 நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் இந்தியாவில் ஒரு அங்கமாக உள்ள தமிழகம் புயலால் பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை வரவில்லை கஜா புயலால் பாதிக்கப் பட்டு தென்னை மரங்கள் விழுந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் உயிரிழந்துள்ளனர். ஒப்புக்குக் கூட ஆறுதல் தெரிவிக்காத பிரதமர் எப்பொழுது தமிழகத்திற்கு வந்தாலும் கருப்புக் கொடி காட்டுவேன். தமிழகத்தின் அனைவரும் கருப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இதற்கு நான் தலைமை தாங்க மாட்டேன் ஒரு ஓரமாக அமர்ந்து இருப்பேன்” என தெரிவித்தார்.