”திமுக ஒரு நச்சு பாம்பு..” மதிமுக அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் சாடல்!
மதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் எந்த உறவும் வேண்டாம் என ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் வலியுறுத்தினார். தவெக வெற்றி மக்கள் தீர்ப்பை காட்டுகிறது; இனி மதிமுக செயல்பாடு திமுகவிலிருந்து தூரமாக இருக்கும் என்றும், தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம் என கூறினார். வருங்காலம் மதிமுகவின் காலம், தொண்டர்கள் பீனிக்ஸ் போல எழும்புவர் என்றார்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் உள்ள மதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று. இதில் கலந்துகொண்டு கட்சியினர் மத்தியில் பேசிய அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், பாம்புக்கு பால் வார்த்தாலும் நஞ்சை கொடுக்கும்; அதுபோல திமுக நச்சு பாம்பு என ஒப்பிட்டு கடுமையாக சாடினார். தில்லுமுல்லுக்கு சொந்தகா்காரர்கள் திமுகவினர் என்றும் அவர்களுடன் இருக்கக்கூடாது என்பது தான் அனைவரின் கருத்து என்றார்.
மேலும், மதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் இருக்கக்கூடாது என்பது தான் நாம் அனைவரின் கருத்தாக உள்ளது என்றும், திமுகவினர் நல்லது செய்வதுபோல் மதிமுகவுக்கு தீங்கு செய்கின்றனர் என குற்றம்சாட்டினார். தவெக வெற்றி பெற்றுள்ளது, மக்கள் நல்ல தீர்ப்பு கொடுத்துள்ளனர். திமுகவுடன் ஒட்டும் உறவும் வேண்டாம் என்கிற கருத்து போன்று; இனிவரும் காலங்களில் செயல்பாடு இருக்கும் என்றும் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் வரை தூரத்தில் இருந்து ரசிப்போம் என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலம் மதிமுகவின் காலமாக இருக்கும், திமுகவை விட்டால் நமது தலையெழுத்து நன்றாக இருக்கும். மதிமுக தொண்டர்கள் சிக்கிமுக்கி கற்கள், பீனிக்ஸ் பறவையாக இருக்கும்வரை மதிமுகவுக்கு அழிவு கிடையாது என்றார்.

