“ரோடு போட்டாங்க.. அப்படியே கூட்டி அள்ளுற மாதிரி இருக்கு” - 2 ஊராட்சிகளுக்கு இடையே சிக்கிய கிராமம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 ஊராட்சிகளுக்கு இடையே தீவு போல சிக்கியுள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீரை அனுப்பும் குழாயை கழற்றி குடிநீர் பிடிக்கும் இவர்கள் கார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது கார்குடி கிராமம். சீர்காழியில் இருந்து சென்றால் ஓலையாம்புத்தூர் வழியே கார்குடிக்கு செல்ல முடியாது. அகணி ஊராட்சியைக் கடந்துதான் செல்ல முடியும். இந்த 2 ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட தீவு போல அமைந்திருக்கிறது கார்குடி கிராமம். 60க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.

கார்குடி கிராமத்துக்கு செல்லும் சாலை மோசமான நிலையில் உள்ளது. ஜல்லி கற்கள் விரித்து போட்டது போலவே காட்சியளிக்கிறது இந்தச் சாலை. இதை சீரமைக்க ஓலையாம்புத்தூர் ஊராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். இந்த வழியில் உள்ள வடிகால் வாய்க்கால் பாலமும் தற்போது இடிந்து விட்டது. இதனால் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். கார்குடி கிராமத்தில் இதுவரை தெருவிளக்கு வசதி செய்து தரப்படவில்லை. ஊராட்சியிலிருந்து தனித்துவிடப்பட்ட கிராமமாக தவிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் கிராமமக்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com