மயிலாடுதுறை: மர்மமான முறையில் உயிரிழந்த 22 ஆட்டுக் குட்டிகள், ஆய்வில் கால்நடை துறையினர்
மயிலாடுதுறை அருகே கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 22 ஆண்டுகள் மர்மமான முறையில் இறந்தது குறித்து கால்நடை துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகம் புத்தகரம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கலியபெருமாள் என்பவரின் மகன் முனியாண்டி (48) இவரும் இவரது குடும்பத்தினரும் மூன்று தலைமுறைகளாக ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 150 ஆடுகளை வளர்த்து பராமரித்து வரும் முனியாண்டி, நேற்றிரவு 22 இளைய ஆடுகளை தனியாக அடைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை அங்கு சென்று பார்த்தபோது 22 இளைய ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த முனியாண்டி, மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் காவல் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் ராமபிரபா, கால்நடை வல்லுநர்கள் ஆடுகள் இறந்தது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.