மயிலாடுதுறை | கோயில் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு
செய்தியாளர்: ஆர்.மோகன்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோயில் அமுதுபடையல் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் மின்விளக்குகள் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள தங்கதுரை என்பவரது மகன் பத்தாம் வகுப்பு படித்து வரும் தமிழ்துரை (15), தனது நண்பர்களுடன் கோயிலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கம்பத்தை மாணவர் தொட்டபோது அவர் மீது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த செம்பனார்கோவில் போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.