கரடி பொம்மைக்கு "மாஸ்க்" - தன்னார்வலரின் நூதன பரப்புரை !
மதுரையில் மக்கள் முகக்கவசம் அணிய வலியுறுத்தி தன்னார்வலர் ஒருவர் நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மதுரை செனாய் நகர் பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர் அசோக்குமார். இவர் மாவட்ட நிர்வாகத்தின் தன்னார்வலர் குழுவில் உறுப்பினராக உள்ளார். கொரானா வைரஸ் தொற்று எதிரொலியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கியும், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் தன்னார்வலர் பணிகளையும் அசோக் குமார் செய்து வந்தார்.
இந்நிலையில், நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், மதுரையில் பொதுமக்கள் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர். குறிப்பாக முகக்கவசம், தனிமனித இடைவெளி இன்றி பொதுமக்கள் நியாய விலைக்கடைகளிலும், பொது இடங்களிலும் நடமாடி வருகின்றனர்.
இதனை கண்டு தன்னார்வலர் அசோக்குமார் பொதுமக்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியத்தை விளக்கும் வகையில் கரடி பொம்மைக்கு முகக்கவசம் அணிவித்து, அதை கையில் வைத்துக்கொண்டு சந்தை, பேரூந்து நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத மக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியத்தை கூறியும், மேலும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவரது இந்த நூதன முயற்சி மதுரை மக்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.

